விட்டுக் கொடுத்து வாழ்ந்தால் போதுமா?



‘சிறந்த கணவன், மனைவியா இருக்க என்ன பண்ணணும்?’

புதுசா கல்யாணமான உறவுக்கார தம்பதி எங்க வீட்டுக்கு வந்திருந்தப்ப கேட்ட கேள்வி. அந்தக் கேள்வி எங்களைப் பார்த்து கேட்டது மனசுக்கு சந்தோஷமா இருந்தாலும், உடனே பதில் தெரியலை. சிரிப்பைப் பதிலா தந்தோம். அவங்க விடவே இல்ல. ‘விட்டுக் கொடுத்து வாழ்ந்தா போதுமா?’னு அடுத்த கேள்வி. 

‘சிறந்த கணவன், மனைவியா திட்டம் போட்டெல்லாம் வாழ்ந்தது இல்லை. நீங்க ஆர்வமா கேட்கிறீங்க. யோசிச்சு சொல்றோம்’னு சொன்னோம். 

‘விட்டுக் கொடுத்து வாழ்ந்தா சிறந்த கணவன், மனைவியா இருக்கலாம்’னு நிறைய பேர் சொல்லுவாங்க. எங்களைப் பொறுத்தவரைக்கும் புரிஞ்சிக்கிட்டு விட்டுக்கொடுத்தாதான் சிறந்த வாழ்க்கை வாழ முடியும். இல்லன்னா எஜமான் & அடிமை வாழ்க்கைதான் கிடைக்கும். தன்மானத்தையும் சுயமரியாதையையும் விட்டுக்கொடுத்து வாழறதுல அர்த்தம் இல்லையே? ஒருத்தருக்கொருத்தர் ‘விட்டுக் கொடுத்துக்கிட்டே இருந்தா, ஏதோ ஒரு நேரம் ‘ஈகோ’ வந்து ஆட்டி படைச்சுடும். 

‘எத்தனை முறைதான் நானே விட்டுத்தர்றது? 10 முறை நான் விட்டுக் கொடுத்தேன். 4 முறைதான் நீ விட்டுக் கொடுத்திருக்கே’ன்னு கணக்குப் போட ஆரம்பிச்சுடுவோம்.

கணவனைப் பராமரிச்சு, குழந்தைகளை வளர்த்து, வீட்டை பராமரிக்கிறது மட்டும் மனைவியோட வேலை இல்லை. அப்படி மட்டும் செஞ்சா கணவனுக்காக மனைவி விட்டுக் கொடுத்து வாழறதா அர்த்தம். வெளில போய் குடும்பத்துக்காக சம்பாதிச்சு, மனைவிக்கு புடவை, நகை எடுத்துக் கொடுக்கிறது மட்டும் கணவனோட வேலை இல்லை. ஒவ்வொருத்தருக்கும் இருக்கிற திறமைகள் குடும்பத்தோட வளர்ச்சிக்குப் பயன்படணும். மனைவின்னா இந்த வேலை பார்க்கணும், கணவன்னா இந்த வேலை பார்க்கணும்ங்கற கட்டாயம் இல்லாம இருக்கணும். இப்பவும் எங்க போனாலும் தம்பதியா போகணும்ங்கிறதை முடிஞ்ச அளவு கடைபிடிக்கிறோம். எந்த முடிவா இருந்தாலும் சேர்ந்துதான் எடுக்கிறோம். தனிப்பட்ட முடிவுன்னு பெரும்பாலும் இருக்காது. என் முடிவுல சாந்தியோட ஆலோசனை இருக்கும்; அவங்க முடிவுல என்னோட ஆலோசனை இருக்கும். ‘விட்டுக் கொடுத்து’ மட்டும் வாழ்ந்தா கஷ்டமாவும், அதையே புரிஞ்சுக்கிட்டு செய்தா சுலபமாவும் இருக்கிறதுதான் எங்களோட அனுபவம்’ 

- சொல்லி நிறுத்துகிற துரைசாமி அவர்களின் முகத்தில் மட்டுமல்ல... வாழ்விலும் வழிகிறது நிறைவு. அறுபது வயதில் காலடி எடுத்து வைக்கிற கணவரின் மணிவிழாவுக்கான வேலைகளில் மும்முரமாக இருக்கிறார் முனைவர் சாந்தி துரைசாமி. கோவை வேளாண் பல்கலைக்கழகம் வழங்கியிருக்கும் ‘டாக்டர்’ பட்டம் பெயருக்கு முன்பும், வாழ்க்கை முழுவதும் கைகோர்த்து நடக்கிற கணவரின் பெயர் பின்பும் அலங்கரிக்க... சாந்தியிடமிருந்து கம்பீரமாக வருகிறது பேச்சு. 

தொடர்கிறார் சாந்தி துரைசாமி

‘‘எட்டாம் வகுப்போட படிக்கிற கனவை மூட்டை கட்டி வெச்சுட்டு குடும்ப வாழ்க்கைக்குக் கிளம்பினேன். கணவர் டிகிரி முடிச்சிருந்தாலும் நான் பத்தாம் வகுப்புகூட முடிக்கலையேன்னு நினைக்கும்போது மனசுக்கு ரொம்ப கஷ்டமா இருக்கும். ‘கல்யாணத்துக்குப் பிறகு படிக்கக் கூடாதா?’ங்கிற கேள்விய முன்வெச்சது என் கணவர்தான். ‘மேல படி’ன்னு சொல்லி எனக்குள்ள இருந்த படிக்கணும்ங்கிற ஆர்வத்தைத் தூசு தட்டி வெளியே எடுத்தார். கணவர் பி.ஏ. படிச்சாருன்னா அவர் படிச்ச அதே காலேஜ்ல நான் எம்.ஏ. தேர்வு எழுதினேன். எட்டாங் க்ளாஸ் சாந்தி, சாந்தி எம்.ஏ. ஆனேன். இப்போ எனக்கு வேளாண் பல்கலைக்கழகத்துல டாக்டர் பட்டம் கொடுத்தபோது, விழா மேடையைச் சுற்றி புகைப்படக்காரர்கள். என்னோட சேர்ந்து பல பெரிய மனிதர்களும் கௌரவ டாக்டர் பட்டம் வாங்கினாங்க. 

புகைப்படக்காரர்கள் சூழ்ந்து பட்டமளிப்பை படம் எடுத்தாங்க. நான் பட்டம் வாங்கிறதைப் பார்க்க முடியாதபடி விழா மேடை தெரியாமல் போக, எழுந்து நின்று எக்கி எக்கிப் பார்த்த கணவரைப் பார்க்கும்போது என்னால் அழுகையை அடக்க முடியவில்லை. பட்டமளிப்பு உரையைப் பேசுகிறபோதே நா தழுதழுத்து போனேன்.  நான் இருக்கிற உயரத்திற்கு தன்னையே ஏணியாக மாற்றினார் என் கணவர். 

வீட்ல பால் காய்ச்சும்போதெல்லாம் கொஞ்சம் தண்ணீர் விட்டுத்தான் காய்ச்சுவாங்க. பாலை அப்படியே காய்ச்சி குடிச்சா உடம்புக்கு நல்லதில்லேன்னு பெரியவங்க சொல்லுவாங்க. கணவன் & மனைவியின் குடும்ப வாழ்க்கையை எவ்வளவு உண்மையா வாழணுங்கிற தத்துவத்தை தண்ணியையும் பாலையும் உதாரணமாக்கி பேராசிரியர் அப்துல் காதர் ஒரு  மேடையில் பேசினார். அதை என்னைக்கும் நான் மறந்தது இல்லை. 

தண்ணீரும் பாலும் இணை பிரியாத ஜோடின்னு வெச்சுக்குவோம். அதை ரொம்ப உணர்ந்த காரணத்தாலதான் பால்காரர் நம்ம வீட்டுக்குக் கொடுக்கும்போது கொஞ்சம் ஜாஸ்தியா பாலில் தண்ணீரை கலந்து ஊத்திடுவார். இணை பிரியாம ஒரு தம்பதி இருந்தாலே பிரிக்கிறதுக்கு நிறைய சோதனைகள் வரும். அது எந்த ரூபத்துலயும் வரலாம். சேர்ந்து இருக்கணும்னு முடிவாகிட்டா எந்த தீய சக்தி பிரிக்க நினைச்சாலும் பொங்கி எழுந்துடுவோம். எல்லாருடைய வாழ்க்கையிலும் நடக்கிற இந்த விஷயத்தை, தினம் வீட்ல பால் காய்ச்சும்போது பார்க்க முடியும். பாலில் இருக்கும் தண்ணீரை ‘ஆவியாக்கி’ பிரிக்கிற வேலையை தீ செய்ய ஆரம்பிக்கும். நேரம் ஆக ஆக, பாலுக்குள்ள இருக்கிற தண்ணீர் ஆவியாகி, பாலை விட்டு பிரிஞ்சு போயிடும். பால் சும்மா இருக்காது. அப்படியே பொங்கி எழுந்து பாத்திரத்துக்கு மேல நிரம்பி வழியும். எந்தத் தீ தன்னையும் தண்ணீரையும் பிரிச்சதோ அந்தத் தீயை பால் அணைச்சுடும். தண்ணீர் ஆவியானதுக்கு அப்புறம் பால் பொங்காம தடுக்கணும்னா, பொங்கி வரும்போதும் கொஞ்சம் தண்ணீரை விட்டா அப்படியே அடங்கிடும். பொங்கின வேகத்துக்கு அடங்குற வேகம் ஈடுகொடுக்கும். 

இந்தக் கதை தெரிஞ்சதுக்கப்புறம் ஒவ்வொரு முறை பால் காய்ச்சி இறக்கும்போதும் பால் சீறி பொங்கற அழகை ரசிப்பேன். இதுக்கு முன்னால் பால் பொங்குதேன்னு பதட்டம்தான் வரும். இப்போ, ‘ஹை... பால் பொங்குதே’ன்னு ரசிக்க முடியுது. தண்ணீரை ஊற்றினதும் பால் அடங்கிப் போகிற அழகை எந்தக் கவிஞராலும் கவிதையா எழுத முடியாது. ‘இணை பிரியாமல் ஒரு அழகான வாழ்க்கையை வாழணும்’னு தினம் நினைச்சுப் பார்த்துக்க கிடைச்ச வாய்ப்பு மாதிரி அதைப் பார்த்தேன். 

எனக்கு எதையும் விட்டுக்கொடுக்க வேண்டிய சூழல் இல்லாமல் போனது. எதையும் புரிந்துகொள்ள முயற்சி எடுப்பேன். அந்தப் புரிதல் அவர்கிட்டே இருந்து கத்துக்கிட்டது. இல்லேன்னா 15 வயசு சிறுமியா, உறவுகளை அனுசரிச்சு, பிள்ளை பெற்று வளர்த்து, வியாபாரத்தை கவனிச்சு, என்னையும் வளர்த்துக்க முடியாம தத்தளிச்சுப் போயிருப்பேன். பள்ளிக்கூடத்தோட படிப்பு முடிஞ்சாலும், வாழ்க்கைப் படிப்பு அவர்கிட்டேயிருந்துதான் தொடங்குச்சு. கூட்டுக் குடும்ப வாழ்வில் அத்தனை பேரையும் இணைத்துக்கொண்டு வாழ்க்கை நடைபோட வேண்டுமானால் ‘புரிந்துகொள்ளும் தன்மைதான்’ அத்தனைக்கும் அஸ்திவாரம். ‘என்னைத் திருமணம் செய்துகொண்டதால் உனக்குப் புது அடையாளம்தான் கிடைக்க வேண்டுமே தவிர, இருக்கிற உன்னுடைய அடையாளத்தையும் இழந்துவிடக் கூடாது’ என்று ஒவ்வொன்றையும் சொல்லிக் கொடுத்து என்னை ஆளாக்கிய கணவரிடம் புரிந்துணர்வு இருந்தது.  

இணைந்து வாழ வேண்டும் என்றால் எல்லாவற்றையும் சகித்துக்கொண்டு வாழணும்னு ஒரு நினைப்பு பரவலா இருக்கு. அப்படி சகித்துக்கொண்டு ரொம்ப நாள் இருக்க முடியாது. அப்படி இருந்தால் அதை வாழ்ந்ததா சொல்ல முடியாது. பெரிய பெரிய படிப்பு படித்துவிட்டு திருமணம் ஆனதும் எல்லாத் திறமையையும் மூட்டை கட்டி வைத்துவிட்டு குடும்ப வாழ்வில் தொலைந்து போகிற நிறைய பெண்கள் இந்தக் காலத்திலும் இருக்கிறார்கள். வாழ்க்கை, வியாபாரம், முடிவுகள், உறவுகள் எல்லாவற்றிலும் என்னையும் பாதியாக்கிக்கொண்டுதான் இல்லறம் நடத்தியிருக்கிறார் என் கணவர். அதை மத்தவங்க சாதனைன்னு சொல்லுவாங்க. எங்களைப் பொறுத்த வரைக்கும் அது கௌரவம்.

35 ஆண்டுகளுக்கு முன்பு 10 ஆயிரம் ரூபாயில் ஆரம்பித்த எங்கள் வணிகம், இன்று ஆயிரக்கணக்கான குடும்பங்களின் அடிப்படைத் தேவைகளைப் பூர்த்தி செய்கிற அளவு வளர்ந்து நிற்பதற்குப் பின்னாலும் புரிந்துகொள்ளும் தன்மைதான் ஆணிவேர். வெற்றியைக் கொண்டாட நிறைய பேர் இருக்கலாம். ஆனால் தோல்வியைத் தாங்கிக்கொள்ள நாங்கள் இருவர் மட்டும் இருந்த நினைவுகள்தான் இணைந்து வாழ்வதின் பெருமையை உணர்த்தியது. 

நான் குழந்தையாக இருந்தபோதே எனக்கு ஒரு குழந்தை பிறந்தது. அதுவும் பெண் குழந்தை. எனக்கு ஒரு குழந்தை என்றால், என்னையும் சேர்த்து என் கணவருக்கு இரண்டு குழந்தைகள். எல்லோருக்குமே கனவாகவும், இல்லற வாழ்வின் அர்த்தமாகவும் இருப்பது குழந்தைகள்தான். ஒவ்வொரு குழந்தை பிறக்கும்போதும் மருத்துவர்களும், செவிலியர்களும், ‘தாயும் சேயும் நலமா’ன்னு பார்ப்பாங்க. குழந்தை ஆரோக்கியமா பிறந்திருக்கான்னு அடுத்து கவனிப்பாங்க.

பெத்தவங்களுக்கு முதல்ல தன்னைப் பத்தின கவலையைவிட தன் குழந்தையைப் பத்தின கனவுதான் அதிகமா இருக்கும். ஆரோக்கியமா, அழகா குழந்தை பொறக்கணும்னு வேண்டாத கடவுள் இருக்காது. எங்களுக்கு முதல் குழந்தையா சக்தி தேவி பிறந்தாள். அழகான குழந்தை; மிக மிக அழகான குழந்தை. எங்கள் குலதெய்வமே குழந்தையாக பொறந்திருக்கிறதா பெரியவங்க கொண்டாடினாங்க. குலதெய்வம் பேரையே குழந்தைக்கும் வெச்சோம். நானும் என் கணவரும், உறவுகளும் செல்லமா ‘மயிலு’னு கூப்பிடுவோம். 

புரிந்துகொண்டு வாழ்கிற எங்களின் இல்லற வாழ்க்கையின் அடையாளம் மயிலு. கணவனும் மனைவியும் எவ்வளவு ஒற்றுமையா வாழறோம்னு சோதிக்க நினைத்த கடவுள் எங்க மயிலை எங்களுக்குக் கொடுத்ததாவே நினைக்கிறோம். அவ வெறும் கௌரவம் மட்டுமில்லை. எங்களோட வரம். இன்னிக்கு மயிலோட பொண்ணுக்கு ஆறு வயசு. அறிவும், அழகும், ஆரோக்கியமும் திருஷ்டி சுத்திப் போடச் சொல்லுற அளவுக்கு இருக்கிற எங்க பேத்திதான் எங்களுக்கு டீச்சர். ‘அப்பச்சி ஏன் லேட்டா சாப்புடுறீங்க?’ன்னு என் கணவரை எனக்கப்புறம் கண்டிக்கிறாங்க பேத்தி. ‘அம்மாயி, நீங்க போயிட்டு வாங்க. மயிலம்மாவை நான் பார்த்துக்கிறேன்’னு என்கிட்டே மயிலோட பொண்ணு சொல்லும்போது எனக்கும் அவருக்கும் பூரிப்புத் தாங்காது. 

சக்தி தேவி என்கிற எங்களுக்குப் பிடிச்ச மயிலுவை நாங்கள் பெற்று வளர்த்த அனுபவம் அடுத்தவங்களுக்கு நிச்சயம் நம்பிக்கையைக் கொடுக்கும். ‘சக்தி தேவி அறக்கட்டளை’ மூலம் ‘மாற்றுத் திறனாளிகளாக’ பிறந்த நூற்றுக்கணக்கான குழந்தைகள் பயனடைகிறார்கள் என்றால், அந்தப் பெரிய மனதை எங்களுக்குத் தந்தவள் மயிலுதான்...

No comments:

Post a Comment